டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-கனடா இடையிலான உலக குரூப் பிளே ஆஃப் சுற்று, உள்விளையாட்டரங்கில் நடைபெறுவதால், அது உயர்தரமானதாக இருக்கும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ஜீஷான் அலி தெரிவித்தார்.
இந்தியா-கனடா இடையிலான உலக குரூப் பிளே ஆப் சுற்று வரும் 15 முதல் 17-ஆம் தேதி வரை கனடாவின் எட்மான்டன் நகரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஜீஷான் அலி கூறியதாவது: உள்விளையாட்டரங்கில் விளையாடுவது யூகி பாம்ப்ரி போன்ற எங்கள் வீரர்களுக்கு சிறப்புமிக்கதாக அமையும். ஏனெனில் இதற்கு முன்னர் நியூஸிலாந்துக்கு எதிராக உள்விளையாட்டரங்கில் விளையாடியபோது உலகத்தரம் வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் யூகி பாம்ப்ரி. உள்விளையாட்டரங்கில் போட்டி நடைபெறுவது எங்களுக்கு சாதகமானதும் அல்ல, பாதகமானதும் அல்ல.
உள்விளையாட்டரங்கில் காற்று, வெயில் என எந்த பிரச்னையும் இருக்காது. அற்புதமான சூழல் இருக்கும். அதனால் இந்த ஆட்டம் உயர்தரமானதாக இருக்கும். கனடா அணி வலுவானதாக உள்ளது. அது நாங்கள் எதிர்பார்த்ததுதான். அந்த அணியில் இடம்பெற்றுள்ள டெனிஸ் ஷபோவெலாவ் விம்பிள்டனில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். எனவே இந்தப் போட்டி கடும் சவால் மிக்கதாக இருக்கும். அதேநேரத்தில் கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதனால் எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்றார்.