இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறுகிறது. அதனால் இந்த ஆட்டத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரஹானே 5 ரன்களில் வெளியேற கோலி, பாண்டே டக்-அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
சற்று நேரம் தாக்குபிடித்த ரோஹித் சர்மா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 5-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ், தோனி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அப்போது 40 ரன்கள் எடுத்த நிலையில் கேதர் ஜாதவ் ஆட்டமிழந்தார்.
பின்னர் தோனியுடன் ஜோடி சேர்ந்த ஹார்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். 66 பந்துகளில் 5 பவுண்டரி, 5 இமாலய சிக்ஸர்களை பறக்கவிட்டு 83 ரன்கள் விளாசினார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நங்கூரமாய் நின்ற தோனி அரைசதம் கடந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காத தோனி 88 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். புவனேஸ்வர் குமார் 32 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
இதனால் 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் கௌடர் நைல் 3, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 2, ஃபால்க்னர் மற்றும் சாம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.