இந்தியா-கனடா இடையிலான உலக குரூப் பிளே ஆப் சுற்று கனடாவின் எட்மான்டன் நகரில் நடைபெற்றது. முதல் நாளில் இந்திய வீரர் ராம்குமார் வெற்றி கண்டார். மற்றொரு இந்தியரான யூகி பாம்ப்ரி தோல்வியடைந்தார். 2-வது நாளில் நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - சாகேத் மைனேனி ஜோடி தோல்வி கண்டது. இதனால் 2-1 என முன்னிலை கண்டது கனடா.
கடைசி நாளில் நடைபெறுகிற ஒற்றையர் ஆட்டங்கள் இரண்டிலும் இந்திய அணி ஜெயிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனால் உலகின் 51-ஆம் நிலை வீரரான டெனிஸ் ஷபோவெலாவ் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று கனடா அணி அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற உதவினார். ராம்குமாருக்கு எதிரான போட்டியில் 6-3, 7-6(1), 6-3 என்ற நேர் செட்களில் ஷபோவெலாவ் வெற்றி கண்டார். இதன்பிறகு நடைபெற்ற கடைசிப் போட்டியில் பிரேடன் ஸ்னரை 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் யூகி பாம்ப்ரி வெற்றி கண்டார். இதனால் கனடா அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலக குரூப் சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது.
கடந்த 3 ஆண்டுகளும் உலக குரூப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை நழுவவிட்ட இந்திய அணி, இந்த முறை கனடாவை வீழ்த்தி உலக குரூப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் களமிறங்கியது. ஆனால் பலம் பொருந்திய கனடா அணியை இந்திய அணியால் வீழ்த்த முடியாமல் போய்விட்டது.
கனடா அணியில் முன்னணி வீரரான மிலோஸ் ரயோனிச் காயம் காரணமாக இடம்பெறவில்லை. எனினும் அந்த அணி அபாரமாக விளையாடியுள்ளது. உலகின் 51-ஆம் நிலை வீரரான டெனிஸ் ஷபோவெலாவ், தான் ஆடிய இரு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று அணிக்குப் பக்கபலமாக விளங்கினார். ஷபோவெலாவ், சமீபத்திய காலங்களில் ரஃபேல் நடால், ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ, ஜோ வில்பிரைட் சோங்கா போன்ற முன்னணி வீரர்களுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்ததோடு, அமெரிக்க ஓபனில் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.