முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வி. மழை காரணமாக கொல்கத்தாவில் வலைப்பயிற்சியில் ஈடுபடமுடியாத நிலைமை என ஆஸ்திரேலிய வீரர்கள் பல காரணங்களால் சரியான மனநிலையில் இல்லை. இந்நிலையில் மேலும் ஒரு விஷயம் அவர்களைத் தொந்தரவுபடுத்தியுள்ளது.
கிரில்டு சிக்கனை 73 டிகிரி செண்டிகிரேட் வெப்பத்துக்குள் சமைக்கவேண்டும் என்பதுதான் ஆஸி. வீரர்கள், வங்காள கிரிக்கெட் சங்கத்துக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை. ஆனால் கொல்கத்தாவில் நேற்று அவர்களுக்கு வழங்கப்பட்ட கிரில்டு சிக்கன் நிர்ணயித்த வெப்பநிலையை விட அதிகமாக சூடாக்கப்பட்டிருந்தது. இதனால் சரியான பதத்தில் வழங்கப்படாத கிரில்டு சிக்கனை ஆஸி. வீரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து இந்த உணவைச் சமைத்த சமையல் நிபுணரிடம் தங்கள் புகாரைத் தெரிவித்துள்ளார்கள். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என்று உறுதி செய்யப்பட்ட பிறகே அவர்கள் சமாதானம் ஆகியுள்ளார்கள்.
சரியான முறையில் சமைக்கப்பட்ட உணவுகளைத் தவிர பிற உணவுகளை ஏற்றுக்கொண்டால் அதனால் வீரர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். இது ஆட்ட முடிவுகளிலும் எதிரொலிக்கும். எனவே என்ன உணவு வேண்டும், அதை எப்படிச் சமைக்கவேண்டும் என்று கூறுகிறோமோ அதேபோல சமைத்துத் தரவும் என்று ஆஸி. வீரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.