கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையின் காரணமாக, இந்திய அணி தனது பயிற்சியை ரத்து செய்தது. எனினும், ஆஸ்திரேலிய அணியினர் உள் அரங்க வசதிகளைக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-ஆவது ஒருநாள் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளும் கொல்கத்தா வந்தடைந்துள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி பயிற்சியில் ஈடுபடுவதாக இருந்தது.
முன்னதாக, , திங்கள்கிழமை பெய்த மழையின் காரணமாக அன்றுமுதல் மைதானம் தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமையும் மழை காரணமாக மைதானம் மூடியே இருந்ததால், ஆஸ்திரேலிய அணியினர் உள்அரங்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாலையில் மைதானத்தில் நடைபெற இருந்த இந்திய அணியின் பயிற்சி மழை நீடித்ததன் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, 'மழை நின்று 2 மணி நேரம் வெயில் இருக்கும் பட்சத்தில் மைதானத்தை ஆட்டத்துக்கு ஏற்றவாறு தயார் படுத்த இயலும். இன்னும் இரு நாள்கள் உள்ளதால் சூழ்நிலை சாதகமாக மாறும் என்று நம்புகிறோம்' என மைதான பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மழைக்கு வாய்ப்பு: வடமேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது, புதன்கிழமை கரையை கடக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ஆட்டம் நடைபெறும் வியாழக்கிழமையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.