அடுத்தடுத்து வெளியேறிய கோலி & தோனி; 300 ரன்களை எட்டுமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 38 ஓவர்களில் 200 ரன்களை எடுத்துள்ளது...
அடுத்தடுத்து வெளியேறிய கோலி & தோனி; 300 ரன்களை எட்டுமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், விராட் கோலி 92 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் இந்தத் தொடரை வெற்றிகரமாக தொடங்கியிருக்கும் இந்திய அணி, வெற்றியைத் தொடரும் முனைப்பில் 2-வது ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளது.

கடந்த சில தினங்களாக கொல்கத்தாவில் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு நாள்களாக இரு அணி வீரர்களும் பயிற்சி பெறுவது பாதிக்கப்பட்டது. வியாழக்கிழமையும் கொல்கத்தாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. எனினும் இன்று காலை முதல் மழை பெய்யவில்லை என்பதால் காலதாமதம் எதுவுமின்றி 2-வது ஒருநாள் போட்டி ஆரம்பமானது. 

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய அதே இந்திய அணி இந்தப் போட்டியிலும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஃபாக்னர், ஸாம்பாவுக்குப் பதிலாக ரிச்சர்ட்சன், அகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

ஈடன் கார்டன்ஸில் மீண்டும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா ஆறாவது ஓவரிலேயே எதிர்பாராதவிதத்தில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்தது. அடுத்த விக்கெட் உடனே விழக்கூடாது என்பதால் ரஹானே, கோலி ஆகிய இருவரும் கவனமாக விளையாடினார்கள். இருவரும் 51 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு நல்ல அடித்தளத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இந்திய அணி 19.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. ரஹானே 62 பந்துகளிலும் கோலி 60 பந்துகளிலும் அரை சதத்தை எட்டினார்கள். பிறகு ரஹானே 55 ரன்களில் எதிர்பாராத விதத்தில் ரன் அவுட் ஆனார். 31-வது ஓவரில் இந்திய அணி 150 ரன்களை எட்டியது.

இதன்பிறகு வந்த ஜாதவ் சுறுசுறுப்பாக விளையாடி 1 சிக்ஸர் 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் அவர் 24 ரன்களில் கோல்டர் நைல் பந்துவீச்சில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து வீரர்கள் வெளியேறியதால் மிகவும் கவனமுடன் விளையாடிய கோலி இன்று சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 92 ரன்களில் கோல்டர் நைல் பந்துவீச்சில் போல்ட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் 5 ரன்களில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் தோனி. இதனால் கொல்கத்தா ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள்.

இந்திய அணி 40 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. கடைசிக்கட்டத்தில் கோலி, தோனி ஆகிய இருவரும் அடுத்தடுத்து வெளியேறியதாலும் அடுத்ததாக பாண்டியா மற்றும் பின்வரிசை வீரர்கள் மட்டுமே விளையாடவுள்ளதாலும் இந்திய அணி இன்றைய போட்டியில் 300 ரன்னைக் கடக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com