கொழும்பு: மோசமான ஆட்டம் மற்றும் தொடர்ச்சியாக எழுப்பப்பட்ட ஊழல் புகார்களின் காரணமாக தவித்து வந்த இலங்கை அணிக்கு, தற்பொழுது ஐ.சி.சி. ஊழல் தடுப்பு குழு விசாரணை மற்றொரு தலைவலியாக அமைந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி சமீப காலமாக தான் பங்கேற்கும் போட்டிகளால் தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. இதன் எதிரொலியாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரனதுங்கா கிரிக்கெட் வீரர்கள் மீது சூதாட்ட புகார் ஒன்றினை தெரிவித்து இருந்தார்.
அதில் அவர் 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி மோசமாகத் தோற்றதற்கு சூதாட்டமே காரணம் என்பதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார். அத்துடன் முன்னாள் வேகப்பந்து வீரரும், முன்னாள் தேசிய அணித் தேர்வாளருமான ப்ரமோதய விக்ரமசிங்கேவும் சமீபத்தில் இலங்கை அணி வீரர்கள் மீது சூதாட்ட புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த தொடர் சூதாட்டப் புகார்களைத் தொடர்ந்து ஐ.சி.சி.எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு குழு இலங்கை அணி மீது விசாரணையை தொடங்கியுள்ளது. ஐ.சி.சி. ஊழல் தடுப்பு குழு பொதுமேலாளர் அலெக்ஸ் மார்ஷல் செய்தியாளர்களிடம் இந்த தகவலை உறுதி செய்தார்.