புரோ கபடி: தமிழ் தலைவாஸூக்கு 3-ஆவது வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 33-32 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியைத் தோற்கடித்தது.

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 33-32 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியைத் தோற்கடித்தது.
இந்த சீசனில் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 3-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்றதன் காரணமாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை பெங்கால் வாரியர்ஸ் இழந்தது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்கால் வீரர் குன் லீ இரு புள்ளிகளைக் கைப்பற்ற, அந்த அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆரம்பத்தில் பெங்கால் அணியின் பின்கள வீரர்கள் தடுமாற, தமிழ் தலைவாஸின் கை ஓங்கியது. 
எனினும் 9-ஆவது நிமிடத்தில் சூப்பர் டேக்கிள் மூலம் இரு புள்ளிகளைப் பெற்ற பெங்கால் அணி ஸ்கோரை சமன் (7-7) செய்தது. 11-ஆவது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்குரின் சிறப்பான ரைடால் அந்த அணி 10-8 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 
இதன்பிறகு 11-ஆவது நிமிடத்தில் பெங்கால் வாரியர்ûஸ ஆல்அவுட்டாக்கிய தமிழ் தலைவாஸ் அணி 13-9 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பெங்கால் வீரர் தீபக் நர்வாலின் சூப்பர் ரைடால் அந்த அணி மோசமான நிலையில் இருந்து மீண்டது. இதன்பிறகு சூப்பர் டேக்கிள் மூலம் பெங்கால் அணியை திணறடித்த தமிழ் தலைவாஸ் அணி, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 18-15 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்திலும் அபாரமாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி, 29-ஆவது நிமிடத்தின் முடிவில் 24-20 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதன்பிறகு அபாரமாக ஆடிய பெங்கால் ரைடர் மணீந்தர் சிங் 31-ஆவது நிமிடத்தில் சூப்பர் ரைடு மூலம் 3 புள்ளிகளை கைப்பற்றினார். இதனால் பெங்கால் அணி 26-24 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 
அதற்குப் பதிலடியாக தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்குர் 3 நிமிடங்களில் 3 புள்ளிகளைக் கைப்பற்றினார். இதனால் தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் முன்னிலை பெற்றது. கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி 31-32 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்தது. ஆட்டத்தின் கடைசி ரைடில் அஜய் தாக்குர் இரு புள்ளிகளைக் கைப்பற்ற, தமிழ் தலைவாஸ் அணி 33-32 என்ற புள்ளிகள் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது.
தமிழ் தலைவாஸ் தரப்பில் அஜய் தாக்குர் 7 புள்ளிகளையும், பின்கள வீரர் அருண் தனது டேக்கிள் மூலம் 8 புள்ளிகளையும் கைப்பற்றினர். அதேநேரத்தில் பெங்கால் தரப்பில் மணீந்தர் சிங் 13 புள்ளிகளைப் பெற்றபோதிலும், அந்த அணி தோற்றது ஏமாற்றமாக அமைந்தது. 
ஹரியாணா வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணி 42-24 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி அணியை தோற்கடித்தது. 
இன்று விடுமுறை: திங்கள்கிழமை ஆட்டம் எதுவும் கிடையாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com