பெங்களூர் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 335 ரன்கள் வெற்றி இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரர் வார்னர் அபாரமாக விளையாடி சதம் எடுத்துள்ளார்...
பெங்களூர் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 335 ரன்கள் வெற்றி இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரர் வார்னர் அபாரமாக விளையாடி சதம் எடுத்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பெங்களூரில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெல்லும்பட்சத்தில் இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வென்ற பெருமையைப் பெறும். இந்திய அணி தனது 926-வது ஆட்டத்தில் மேற்கண்ட சாதனையை படைக்கும் வாய்ப்பை நெருங்கியுள்ளது. கடந்த ஜூலைக்குப் பிறகு இந்திய அணி ஒரு நாள் ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கவில்லை. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி வெளிநாட்டு மண்ணில் கடைசியாக விளையாடிய 11 ஆட்டங்களிலும் தோற்றுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 6 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் இந்தியா 4 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது.

தற்போதைய நிலையில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்ட இந்திய அணி, தொடரையும் கைப்பற்றிவிட்டது. எனவே இந்த ஆட்டத்தில் எவ்வித நெருக்கடியும் இன்றி இந்திய அணி களமிறங்கியுள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணி, இந்தத் தொடரில் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் தோற்குமானால், தரவரிசையில் இறக்கத்தைச் சந்திக்கும். அதாவது 3-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்குத் தள்ளப்படும். எனவே கடும் நெருக்கடிக்கு மத்தியில் களமிறங்கியுள்ளது ஆஸ்திரேலியா.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் குல்தீப், பூம்ரா, புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல், ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட், ஆடம் ஸம்பா இடம்பெற்றுள்ளார்கள். மேக்ஸ்வெல் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அகர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

பூம்ரா, புவனேஸ்வர் குமார் இல்லாததால் ஆஸி. தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினார்கள். ஷமி, உமேஷ் யாதவின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டார்கள். தொடர்ந்து பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை நன்கு உயர்த்தினார்கள். வார்னரும் ஃபிஞ்சும் ஒன்றாகச் சேர்ந்து 53 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்கள். இருவரில் டேவிட் வார்னர் முதலில் அரை சதம் எடுத்தார். 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 45 பந்துகளில் அரை சதம் எடுத்தார். பிறகு, 15.4 ஓவர்களில் 100 ரன்கள் எட்டினார்கள். இந்த ஸ்கோர் 20 ஓவர்களில் 124 ரன்கள் ஆனது.

புவனேஸ்வர் குமார், பூம்ரா, குல்தீப் ஆகிய மூன்று முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாத குறையை நன்கு உணரமுடிந்தது. எவ்விதத் தடங்கலும் இல்லாமல் ஆஸி. வீரர்கள் ரன் குவித்தார்கள். சஹால் பந்துவீச்சில் ஃபிஞ்ச் 47 ரன்களில் இருந்தபோது ஸ்டம்பிங் வாய்ப்பைத் தவறவிட்டார் தோனி. ஆரம்பத்தில் அக்‌ஷர் படேல் சிறப்பாகப் பந்துவீசினார். பிறகு அவர் பந்துவீச்சையும் பதம் பார்த்தார்கள். 25-வது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 148 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. இதனால் இந்தப் போட்டியில் அந்த அணி சுலபமாக 300 ரன்களுக்கு அதிகமாக எடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

5 பந்துவீச்சாளர்களும் திருப்புமுனையை ஏற்படுத்தாததால் 31-வது ஓவரை கெதர் ஜாதவைப் பந்துவீச அழைத்தார் கோலி. அந்த ஓவரில் பவுண்டரி அடித்து 103 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் சதம் எடுத்தார் வார்னர். இது அவருடைய 14-வது ஒருநாள் சதமாகும். தன்னுடைய 100-வது ஒருநாள் போட்டியை சதமெடுத்து அசத்தியுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி, 34 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 222 ரன்கள் எடுத்தது. இதனால் மீதமுள்ள 16 ஓவர்களில் குறைந்தபட்சம் 150 ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென 5 ரன்கள் இடைவெளியில் 3 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா. ஜாதவ் பந்துவீச்சில் 119 பந்துகளில் 4 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் வார்னர். பிறகு வந்த ஸ்மித், 3 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டிகளில் இது உமேஷின் 100-வது விக்கெட்டாகும். இதன்பின்னர், சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபிஞ்ச் 94 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் நெருக்கடிக்கு ஆளானது ஆஸி. அணி.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஹெட் - ஹேண்ட்ஸ்காம்ப் பொறுப்புடன் விளையாடி ரன்களைச் சேர்த்தார்கள். அணியின் ஸ்கோர் 300 ரன்களை எட்டும் முன்பு 47-வது ஓவரில் 29 ரன்களில் உமேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஹெட். 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் நன்கு விளையாடி வந்த ஹேண்ட்ஸ்காம்ப்43 ரன்களில் உமேஷ் பந்துவீச்சில் போல்ட் ஆனார். 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் 10 ஓவர்களில் 71 ரன்களைக் கொடுத்தார் உமேஷ் யாதவ். 

ஆஸி. அணி, 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது. ஸ்டோனிஸ் 15, வேட் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளும் ஜாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com