2015-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிகழ்த்திய ஒரு சாதனை, அந்த அணி இல்லாத இரண்டு வருடங்களிலும் கூட முறியடிக்கப்படவில்லை.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதி முத்கல் தலைமையிலான குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
சிஎஸ்கே கடைசியாக ஐபிஎல்-லில் விளையாடிய 2015-ம் வருடம் ஒரு சாதனை செய்தது. அதாவது அந்த ஐபிஎல் முழுக்க சிஎஸ்கே 14 வீரர்களை மட்டுமே பயன்படுத்தியது. அந்தளவுக்குப் பலம் பொருந்திய அணியாக இருந்தது சிஎஸ்கே. அணியில் இடம்பெற்ற பெரும்பாலான வீரர்கள் அருமையாகப் பங்களிப்பு செய்ததால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. அந்த வருடத்தின் லீக் சுற்றின் முடிவில் 18 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது சிஎஸ்கே. பிறகு இறுதிப் போட்டியில் மும்பை அணியிடம் தோற்றுப்போனது.
ஐபிஎல்-லில் ஒரு சீசனில் குறைவான வீரர்களைப் பயன்படுத்திய அணி என்கிற சாதனையை அந்த வருடம் படைத்தது சிஎஸ்கே. எனினும் அடுத்த இரு வருடங்களில் சென்னை அணி ஐபிஎல்-லில் பங்கேற்கவில்லை. அப்போதும் சென்னை அணியின் சாதனையை மற்ற அணிகளால் தகர்க்க முடியாமல் போனது. அந்தளவுக்குப் பலம் பொருந்திய அணி மற்ற அணிகளுக்கு அமையாததே இதற்குக் காரணம்.
இந்த வருடமாவது சென்னை அணியின் சாதனையைத் தகர்க்க மற்ற அணிகள் முயற்சி செய்யுமா?