ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, ஜம்முவில் உள்ள உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தால் புதன்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்திலுள்ள பாகர்வாலில் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, ஜம்மு உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் புதன்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல்
கட்சிகள், அமைப்புகள், குழுக்கள் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தன.
இதையடுத்து, ஜம்மு பிராந்தியத்தில் உள்ள கதுவா, சம்பா, உதம்பூர் மாவட்டங்களில் உள்ள சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கடைகள் உள்ளிட்டவையும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்தன. அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் குறைவான எண்ணிக்கையிலேயே விடப்பட்டிருந்தன.
ஜம்முவின் பல்வேறு இடங்களில் வழக்குரைஞர்கள் சார்பில் அமைதி பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால், ஜம்மு பிராந்தியத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை புதன்கிழமை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்தச் செய்தி நியூயார்க் டைம்ஸில் இடம்பெற்றது. இதைப் பகிர்ந்து ட்விட்டரில் கவலையுடன் சாய்னா மிர்சா கூறியதாவது:
இதுபோன்ற ஒரு நாடாகத்தான் உலகுக்கு நம்மைத் தெரியப்படுத்திக் கொள்கிறோமா? பாலினம், ஜாதி, நிறம், மதம் இவற்றைக் கடந்து இந்த 8 வயதுச் சிறுமிக்காக நாம் துணை நிற்காவிட்டால் வேறு எதற்கும் நாம் துணை நிற்க மாட்டோம். மனிதத்தன்மைக்காகவும் கூட நிற்க மாட்டோம். இது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது என்று ட்வீட் செய்துள்ளார்.