சொந்த மைதானத்தில் ஆடும் சாதகமான அம்சத்தை இழந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் முதன்முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் வெள்ளிக்கிழமை மோதுகிறது. இரு அணிகளுமே 2 ஆண்டுகள் தடைக்கு பின் நேரடியாக மோதுகின்றன.
2 ஆண்டுகள் தடைக்கு பின் சிஎஸ்கே அணி நிகழாண்டு தான் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதற்கிடையே பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதில் சிஎஸ்கே வென்றது. எனினும் பாதுகாப்பு கருதி சிஎஸ்கே உள்ளூர் ஆட்டங்கள் புணேவுக்கு மாற்றப்பட்டன.
3 ஆட்டங்கள் விளையாடி 2-இல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் சிஎஸ்கே பெற்றுள்ளது. ராயல்ஸ் அணி 4 ஆட்டங்கள் ஆடி 2 வெற்றி, 2 தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் தற்போதைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். பட்டியலில் சிஎஸ்கே 4 மற்றும் ராயல்ஸ் 5-வது இடத்திலும் உள்ளனர். இப்போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார். சுழற்பந்து ஆடுகளத்தில் ராஜஸ்தான் அணியின் செயல்பாடு சீராக இல்லாத நிலையில் உள்ளது.
ரஹானே தனது வழக்கமான ஆட்டத்துக்கு இன்னும் திரும்பவில்லை. பந்துவீச்சில் கெளதம், லாஹ்லின் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை தருகின்றனர். பென் ஸ்டோக்ஸ் இதுவரை தனது திறனை வெளிப்படுத்தவில்லை.
மாறாக சிஎஸ்கே அணி மும்பை, கொல்கத்தா அணிகளை வென்று, பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது. தோனி, பிராவோ, அம்பதி ராயுடு, ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். பந்துவீச்சில் வாட்சன், தாகுர், தாஹிர், ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அனுபவ வீரர்கள் ஹர்பஜன், ரவீந்திர ஜடேஜா உள்ளதும் சிஎஸ்கே அணிக்கு பலமாக உள்ளது.
சிஎஸ்கே அணி ஆடுவதைக் காண 1000 ரசிகர்கள் புணேவுக்கு சிறப்பு ரயில் மூலம் பயணித்துள்ளனர்.