தெலங்கானா மாநில அரசுப் பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டனில் பதக்கம் வென்ற இந்திய அணியினரை கெளரவிக்கும் நிகழ்ச்சி ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சந்திரசேகர ராவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதுதொடர்பாக அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "தெலங்கானாவில் தற்போது கல்வி நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநில அரசு பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கோப்புகள் முதல்வர் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவர் ஒப்புதல் வழங்கிய பிறகு அதுதொடர்பான அரசாணை வெளியிடப்படும்' என்றார்.
முன்னதாக, இந்திய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சாய்னா நெவால், வெள்ளி வென்ற சிந்து, ஸ்ரீகாந்த், சாத்விக்சாய்ராஜ், சிக்கி ரெட்டி ஆகியோரை முதல்வர் சந்திரசேகர ராவ் கெளரவித்தார். அப்போது, மாநிலத்துக்கும், தேசத்துக்கும் பெருமை தேடித் தந்ததற்காக அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.