கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் மகளிர் அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர். 8-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியில், பிரேசில் அணி 7-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலமாக, அடுத்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கும், 2020-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் பிரேசில் மகளிர் அணி தகுதிபெற்றுள்ளது.
முன்னதாக பிரேசில், தான் ஆடிய 7 லீக் ஆட்டங்களிலுமே வெற்றி கண்டிருந்தது. இதனிடையே, ரவுண்ட் ராபினின் கடைசி ஆட்டத்தில் 4 புள்ளிகளுடன் இருந்த சிலி, 3 புள்ளிகளுடன் இருந்த ஆர்ஜென்டீனாவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியதை அடுத்து, பிரேசிலுக்கான வெற்றி ஏறத்தாழ உறுதியானது. அதேவேளையில், சிலியும் தனது உலகக் கோப்பை போட்டி வாய்ப்பை உறுதி செய்தது.
இந்நிலையில், ஒரு புள்ளியுடன் இருந்த கொலம்பியாவை இறுதி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனது பிரேசில்.