ஸ்வீடன் ஹாம்ஸ்டட் நகரில் நடைபெறவுள்ள உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் இரு பிரிவுகளாக புறப்பட்டுச் சென்றனர்.
வரும் 29-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன. அண்மையில் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி டேபிள் டென்னிஸில் இந்திய வீரர், வீராங்கனைகளை சிறப்பாக ஆடி 2 தங்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை வென்றனர். காமன்வெல்த்தில் பங்கேற்ற அதே அணியே உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் அனுப்புகிறது.
சரத்கமல் தலைமையிலான இந்திய அணி போட்டிகள் தொடங்கும் வரை வர்பெர்க் என்ற இடத்தில் பயிற்சியில் ஈடுபடும். இதுதொடர்பாக சரத்கமல் கூறியதாவது:
தற்போது தரவரிசைப்பட்டியில் ஆடவர் அணி 10-ஆம் இடத்திலும், மகளிர் அணி 14-ஆம் இடத்திலும் உள்ளன. முதல் 12 இடங்களுக்குள் இந்திய அணி இடம் பெற்றால் சிறப்பானதாகும்.
நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா கூறுகையில்: தற்போது எனது ஆட்டத்திறன் சிறப்பாக அமைந்துள்ளது. அணியின் தன்னம்பிக்கையும் அபரிதமாக உள்ளது. உலக சாம்பியன் போட்டிகள் புதிய கடினமான அனுபவங்களை தரும் என்றார்.