தில்லி டேர்டெவில்ஸ் அணியின் தொடர் தோல்வி எதிரொலியாக அதன் கேப்டன் பதவியில் இருந்து கெளதம் கம்பீர் திடீரென விலகி உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தில்லி அணி தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது. கொல்கத்தா அணியில் இருந்து தில்லி அணியில் இடம் பெற்ற கம்பீர் கேப்டனாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தில்லி அணியின் தொடர் தோல்வியால் பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. தோல்விக்கு பொறுப்பேற்று தான் விலகுவதற்காக கம்பீர் புதன்கிழமை அறிவித்தார். இதற்கு எந்தவித நிர்ப்பந்தமும் இல்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில்: எனது ஆட்டத்திறனும் சிறப்பாக இல்லை. கேப்டன் பதவிக்கான அழுத்தத்தை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.
இதற்கு நான் தகுதியானவன் இல்லை. நான் கொல்கத்தா அணியில் ஆடிய போது வயது 28. தற்போது 36 வயதாகிறது. இதுவும் ஆட்டத்திறன் மங்கியதற்கு காரணமாக இருக்கலாம்.
கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் மீதமுள்ள 8 ஆட்டங்களில் பங்கேற்பேன்.
ரூ.2.8 கோடி ஊதியம்
பதவி விலகியதோடு, தனக்கான ரூ.2.8 கோடி ஊதியத்தையும் கம்பீர் விட்டுத் தர முன்வந்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஆட்டத்திறன் சிறப்பாக இல்லாமையால் ஊதியத்தை வீரர் ஒருவர் விட்டுத்தருவது இதுவே முதன்முறையாகும். 6 ஆட்டங்களில் கம்பீர் மொத்தம் 85 ரன்களே எடுத்திருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அணியின் கேப்டனாக இருந்த கம்பீர் இருமுறை அந்த அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தார். இந்தியா அணியிலும் பல்வேறு
வெற்றிகளுக்கு காரணமாக ரன் குவித்தார்.
புதிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்
கம்பீர் பதவி விலகலைத் தொடர்ந்து இளம் வீரர் ஷ்ரேயஸ் ஐயரை அணியின் கேப்டனாக டேர் டெவில்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன் என்றார் ஷ்ரேயஸ்.
நிகழாண்டு ஐபிஎல் போட்டிகளில் தில்லி அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராகவும், கம்பீரை கேப்டனாகவும் நிர்வாகம் நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.