மும்பை: யானைபோல் எழுவதற்கு நேரம் பிடிக்கப்போவதில்லை குதிரை போல் மும்மடங்கு வேகத்தில் ஓட தயாராக உள்ளோம் என்று மும்பை அணியுடனான தோல்வி குறித்து சென்னை அணியின் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.
ஐ.பி.எல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி வந்தவர் ஹர்பஜன் சிங். தற்பொழுது ஐபிஎல் 11-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு விளையாடி வருகிறார்.
அணிக்கு தேர்வு செய்யப்பட்டதிலிருந்து ஹர்பஜன் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்து தமிழக கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் யானைபோல் எழுவதற்கு நேரம் பிடிக்கப்போவதில்லை குதிரை போல் மும்மடங்கு வேகத்தில் ஓட தயாராக உள்ளோம் என்று மும்பை அணியுடனான தோல்வி குறித்து சென்னை அணியின் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.
மும்பையில் சனிக்கிழமை அன்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த தோல்வி தொடர்பாக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தோல்வி எனும் அடி சறுக்கியது
ஆனால்,நாம் யானைபோல் எழுவதற்கு
நேரம் பிடிக்கப்போவதில்லை குதிரைபோல்
மும்மடங்கு வேகத்தில் ஓட தயாராக உள்ளோம்.
தோல்வியின் பாடம் என் வெற்றியை அழகாக்கும்
இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினிகாந்த்தின் 'பாபா' படம் தோல்வி அடைந்த பொழுது ரஜினி இனி அவ்வளவுதான் என்று பேசப்பட்டது. அதன் பின்னர் 'சந்திரமுகி படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், 'கண்ணா, யானைதான் படுத்தா எந்திரிக்க டைம் ஆகும்; நான் குதிரை..சும்மா அப்டியே டக்குனு தட்டி விட்டுட்டு எழுந்துடுவேன்' என்று பேசினார்.
தற்பொழுது ஹர்பஜன் சிங்கும் இது போலவே கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.