தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.
இலங்கையில் புதன்கிழமை பகலிரவாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. அணியின் தொடக்க வீரர் உபுல் தரங்கா 9 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த நிரோஷன் டிக்வெல்லா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
குசல் மென்டிஸ் டக் அவுட்டாக, அடுத்து வந்த குசல் பெரேரா 12, ஷேஹான் ஜெயசூரியா 18, திசர பெரேரா 19, அகிலா தனஞ்ஜெயா 9, சுரங்கா லக்மல் 7 ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.
கேப்டன் ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 79, பிரபாத் ஜெயசூரியா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்க தரப்பில் லுன்கி கிடி, அன்டிலே பெலுக்வாயோ தலா 3 விக்கெட்டுகளும், ககிசோ ரபாடா, வில்லெம் மல்டர் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா 245 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடி வந்தது.