யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய ஜூனியர் ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆர்ஜென்டீனா தலைநகர் பியனோஸ் அயர்ஸில் வரும் அக்டோபர் மாதம் 6 முதல் 18-ஆம் தேதி வரை யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கின்றன. இதற்கான தகுதி ஆட்டங்களில் இந்திய ஆடவர் அணி தோல்வியே சந்திக்கவில்லை. தாய்லாந்து, ஜப்பான், ஹாங்காங், தென்கொரிய அணிகளை வென்று இறுதியில் மலேசியாவை வென்று தகுதி பெற்றது.
இந்திய மகளிரணி சிங்கப்பூர், தென்கொரியா, தாய்லாந்து, மலேசியாவை வென்றது. இறுதியில் சீனாவிடம் தோல்வியைத் தழுவியது.
எனினும் இரு அணிகளும் யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றன.
ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, கனடா, ஆர்ஜென்டீனா, ஆஸ்திரியா, வங்கதேசம், போலந்து, மெக்ஸிகோ, மலேசியா, கென்யா, ஜாம்பியா, வனடூ நாடுகளுடன் இந்தியா இடம் பெறுகிறது. மகளிர் பிரிவில் சீனா, ஆர்ஜென்டீனா, ஆஸ்திரியா, போலந்து, உருகுவே மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, நமீபியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வனடூ ஆகிய நாடுகளுடன் இந்தியா இடம் பெறுகிறது.
கடந்த 2010, 2014 போட்டிகளை தவற விட்ட நிலையில் முதன்முறையாக இந்திய அணிகள் யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. ஹாக்கி இந்தியா பொதுச் செயலர் முஷ்டாக் அகமது இரு அணிகளையும் பாராட்டியுள்ளார்.