இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்பு?

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் பதவியேற்கும் விழாவில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் பதவியேற்கும் விழாவில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானின் பிரதமராக அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிடிஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வரும் 18-ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சுனில் கவாஸ்கர் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக  நவ்ஜோத் சிங் சித்து சனிக்கிழமை தெரிவித்தார். 

மேலும் பஞ்சாப் அரசு இதுதொடர்பாக சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க இருக்கும் பிடிஐ கட்சியின் தலைவர் இம்ரான் கான் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் அரசின் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும், சித்துவுக்கு தனிப்பட்ட முறையில் தொலைபேசியிலும் அழைப்பு விடுத்துள்ளார். சித்து அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்" என்று கூறப்பட்டிருந்தது.  

இதனால், இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் சித்து பங்கேற்க வாய்ப்புள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com