இங்கிலாந்துடனான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 4-ஆவது நாள் ஆட்டத்தில் கோலி காயம் காரணமாக களமிறங்கவில்லை.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி பேர்ஸ்டோவ் மற்றும் வோக்ஸின் அட்டகாசமாக பாட்னர்ஷிப்பால் முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் முன்னிலை பெற்றது. பேர்ஸ்டோவ் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். வோக்ஸ் டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதம் அடித்து 120 ரன்களுடன் களத்தில் இருந்தார். 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்றைக்கு 4-ஆவது நாள் ஆட்டத்தை வோக்ஸ் மற்றும் குரான் தொடர்ந்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே எந்த வித உடற்பயிற்சியையும் மேற்கொள்ளவில்லை. அதனால், 4-ஆவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி ரஹானே தலைமையில் களமிறங்கியது.
இதையடுத்து, 4-ஆவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் குரான் துரிதமாக 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது 396 ரன்கள் குவித்து 289 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து வோக்ஸ் 137 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்தது.
இந்த இன்னிங்ஸிலும் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் டக் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ராகுலும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 4-ஆவது வீரராக விராட் கோலி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதிலாக ரஹானே களமிறங்கினார்.
விராட் கோலிக்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதலில் பீல்டிங் செய்யவில்லை. அவர் 3-ஆவது நாள் ஆட்டத்திலும் நிறைய நேரம் பீல்டிங் செய்யவில்லை. அவர் நீண்ட நேரமாக பீல்டிங்கில் ஈடுபடாததால், ஐசிசி விதிமுறைப்படி இந்திய அணியின் இன்னிங்ஸின் தொடங்கி 37 நிமிடங்களுக்கு அவர் பேட்டிங்கில் களமிறங்க கூடாது. அதனால் தான் ராகுல் ஆட்டமிழந்தவுடன் அவருக்கு பதிலாக ரஹானே களமிறங்கியிருப்பார் என்று கணிக்கப்படுகிறது.
அவருக்கு ஏற்பட்ட காயம் அச்சப்படும் அளவுக்கு பெரிதளவு இல்லை என்று தெரிகிறது. இருப்பினும், இந்த தொடரில் இந்திய அணியில் இருந்து அரைசதம் அடித்த ஒரே வீரர் கோலி மட்டும் தான் என்பதால் இது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
லார்ட்ஸ் டெஸ்டின் 2-ஆவது இன்னிங்ஸில் விராட் கோலி 5-ஆவது வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணி 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த இடையூறால், 4-ஆவது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை எடுக்கப்பட்டள்ளது.
இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் இதுபோன்ற மழை குறுக்கீடுகள் நிச்சயம் அவசியமானது.