உலகக் கோப்பை கனவை நனவாக்க ஆசியப் போட்டியில் வெற்றி பெறுவது அவசியம் என இந்திய ஹாக்கி அணி தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறியுள்ளார்.
ஜகார்த்தா ஆசியப் போட்டிக்காக ஹாக்கி அணி சென்றுள்ள நிலையில் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஆசியப் போட்டியில் தங்கம் வெல்வதின் மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும். இதில் கூடுதல் கவனத்தை செலுத்துகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக இந்திய ஹாக்கியின் மேம்பாட்டை உணர்த்தி வருகிறோம். தற்போது உலகின் 5-வது நாடாக உள்ளோம். இந்த ஆண்டு இறுதியில் மூன்று நாடுகளில் ஒன்றாக வர வேண்டும்.
இதற்கு முதல்படி ஆசிய போட்டி தங்கம் வெல்வதாகும். இப்போட்டியில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தை நாம் தக்க வைக்க வேண்டும். இதனால் ஒலிம்பிக்குக்கு நேரடித் தகுதி பெறலாம். இந்த ஆண்டு இறுதியில் புவனேஸ்வரத்தில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடக்கிறது. அதில் முதல் மூன்று இடங்களில் ஒன்றை நாம் பெற வேண்டும்.
நாம் நமது ஒவ்வொரு ஆட்டத்திலும் நம்மை வெளிப்படுத்த வேண்டும். ஒலிம்பிக் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றால் ஒன்றரை ஆண்டுகளில் நாம் தயாராக முடியும். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் நாம் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளோம். அதில் அணி செய்த தவறுகளை பிற்சி முகாமில் தீர்த்துள்ளோம். பெனால்டி கார்னரை கோலாக மாற்றுதல், தற்காப்பு போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி உளளோம் என்றார் சிங்.
ஏ பிரிவில் கொரியா, ஜப்பான், இலங்கை, ஹாங்காங் அணிகளோடு இந்தியா இடம் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 22-இல் முதல் ஆட்டத்தில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது இந்தியா.