ஆசியப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணியில் இருந்து மூத்த வீரர் பயஸ் விலகியதால் பதக்க வாய்ப்பில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என அணியின் கேப்டன் ஜீஷன் அலி தெரிவித்துள்ளார்.
இந்திய டென்னிஸ் அணி ஆசியப் போட்டியில் பங்கேற்றுள்ளது. இரட்டையர் பிரிவில் மூத்த வீரர் லியாண்டர் பயஸ் இடம் பெற்றிருந்தார்.
அவர் தன்னுடன் ரோஹன் போபண்ணா இணையாக விளையாட அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். ஆனால் போபண்ணாவும்-டிவிஜ் சரணும் இணைந்து விளையாட முடிவு செய்து விட்டனர்.
இதையடுத்து இளம் வீரர் சுமித் நகாலுடன் விளையாடுமாறு பயஸை ஏஐடிஏ கேட்டுக் கொண்டது. இதனால் அதிருப்தி அடைந்த பயஸ் ஆசியப் போட்டிக்கான அணியில் இருந்து விலகுவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.
இதுதொடர்பாக அணியின் கேப்டன் ஜீஷன் அலி கூறியதாவது: பயஸ் விலகியதால் இரட்டையர் பிரிவில் பதக்க வாய்ப்பு பாதிக்கப்படும். யாருடன் இணைந்து விளையாடுகிறோம் என்பது இல்லாமல் நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பதை பயஸ் நினைத்திருக்கலாம். கடந்த இன்சியான் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றிருந்தது.
கலப்பு இரட்டையர் பிரிவிலும் அணிச் சேர்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயஸுடன் கலந்து பேசவில்லை எனக் கேட்டபோது, அவர் கடைசி நிமிடத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரிடம் தான் இதற்கு விடை தேட வேண்டும். அவருடன் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருமாறு கூறினேன். எனினும் அவரது முடிவை நாம் மதிக்க வேண்டும். இந்தியாவுக்கான அவரது பங்களிப்பை நாம் மறக்க முடியாது என்றார் அலி.