இங்கிலாந்துடனான 3-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் விராட் கோலி சதமடித்தார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 97 ரன்கள் எடுத்து 3 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. 2-ஆவது இன்னிங்ஸிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி முதலில் அரைசதம் அடித்தார்.
இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் 3 ரன்களில் தவறவிட்ட சதத்தை இந்த இன்னிங்ஸில் அடிக்கும் நோக்கில் விளையாடி வந்த கோலி 93 ரன்கள் எடுத்திருந்த போது ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்திருப்பார். ஆனால், ஜென்னிங்ஸ் அந்த கேட்சை தவறவிட்டார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட கோலி டெஸ்ட் அரங்கில் தனது 23-ஆவது சதத்தை அடித்தார். இந்த தொடரில் இது கோலியின் 2-ஆவது சதமாகும்.
இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் கோலி, சேவாக்குடன் 4-ஆவது இடத்தை பகிர்ந்துகொண்டார்.
அதிக டெஸ்ட் சதம் அடித்த இந்திய வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர் - 51
ராகுல் டிராவிட் - 36
சுனில் கவாஸ்கர் - 34
விரேந்திர சேவாக் விராட் கோலி - 23
முகமது அசாருதின் - 22