2014-ல் லார்ட்ஸ் டெஸ்டை இந்திய அணி வென்றது. அப்போது முதல் டெஸ்ட் நடைபெற்ற டிரெண்ட் பிரிட்ஜில் இடம்பெற்ற அதே அணியே லார்ட்ஸ் டெஸ்டிலும் இடம்பெற்றது. ஆனால் அடுத்த டெஸ்டில் இந்திய அணியில் மாற்றம் நிகழ்ந்தது. இஷாந்த் சர்மா, பின்னிக்குப் பதிலாக பங்கஜ் சிங், ரோஹித் சர்மா அணியில் இடம்பெற்றார்கள். அன்று ஆரம்பித்த அணி மாற்றம் கடந்த டெஸ்ட் வரை தொடர்ந்துள்ளது.
ஆமாம். இதுவரை கோலி தலைமையில் விளையாடிய இந்திய அணி, அடுத்த டெஸ்டிலும் தொடர்ந்ததில்லை.
கோலி தலைமையில் இந்திய அணி விளையாடிய அனைத்து டெஸ்டுகளிலும் குறைந்தது ஒரு மாற்றமாவது நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற 3-வது டெஸ்ட், கோலி தலைமையேற்ற 38-வது டெஸ்ட். அதில் மூன்று மாற்றங்கள் இருந்தன. இதுபோல கோலி தலைமையில் தொடர்ச்சியாக இரு டெஸ்டுகளில் ஒரே அணி இதுவரை விளையாடியதில்லை!
2014 லார்ட்ஸ் டெஸ்டுக்குப் பிறகு கடந்த டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்ட் வரை தொடர்ந்து 45-வது டெஸ்டுகளாக இந்திய அணியில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் தோனி, கோலி, ரஹானே ஆகியோர் இந்திய அணியின் கேப்டன்களாகப் பணியாற்றியுள்ளார்கள்.
ஆனால் இன்று தொடங்கும் 4-வது டெஸ்டில் தனது விநோத சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளார் கோலி. கடந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அனைவரும் சிறப்பாகப் பங்களித்தார்கள். இதனால் 4-வது டெஸ்டிலும் அதே அணியைத் தொடர கோலி முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பல வருடங்களுக்குப் பிறகு இரு டெஸ்டுகளில் ஒரே அணி விளையாடவுள்ளது. எனினும் அணியில் பிருத்வி ஷா, ஜடேஜா ஆகியோரைச் சேர்க்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.