தெலங்கானாவில் சட்டப் பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில், காபந்து முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், தெலங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகள் இணைந்து அமைத்துள்ள மக்கள் முன்ணணிக்கும், பாஜகவுக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 2.80 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 32,815 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெலங்கானாவில் முதல்முறையாக இந்தத் தேர்தலில் வாக்காளர் ஒப்புகைச் சீட்டுடன் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று ஆர்வத்துடன் வாக்களிக்கச் சென்ற பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளார். மேலும் இதே சிக்கலால் தன் தந்தை, சகோதரியாலும் இன்று வாக்களிக்கமுடியாமல் போனதாக அவர் கூறியுள்ளார். இணையத்தில் சோதித்துப் பார்த்தபோது தன்னுடைய பெயர் இருந்ததாகவும் அதன்பிறகே தான் வாக்களிக்கச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
2014-ம் ஆண்டுத் தேர்தலில் தான் வாக்களித்ததாகவும் தற்போது வாக்காளர் பட்டியலில் தன் பெயர் நீக்கப்பட்டதால் வாக்களிக்கமுடியாமல் போனதாகவும் ட்விட்டரில் ஜுவாலா கட்டா பதிவுகள் எழுதியுள்ளார். ஒரே வீட்டில் கடந்த 12 வருடங்களாக வசித்துவருகிறேன். பெயர்கள் நீக்கப்பட்டால் அது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்குத் தகவல் அளிக்கவேண்டும். இதுபோல பெயர்கள் மர்மமான முறையில் காணாமல் போனால் தேர்தல் எப்படி நியாயமாக நடைபெறும்? மேலும், அரசியல் கட்சியில் இணைவதற்காக இந்தப் புகாரை தெரிவிக்கவில்லையென்று இந்த விவகாரம் குறித்து அவர் விடியோ வெளியிட்டுள்ளார்.