இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை போட்டித் தரவரிசையில் 4-ஆம் இடத்தில் இருக்கும் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து எதிர்கொண்டார்.
இதில் துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, சிறப்பாக செயல்பட்டு 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ரட்சனோக் இன்டனோனை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதையடுத்து இந்திய ஓபன் சூப்பர் 500 உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாங் பீவனுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.