இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பிடிக்க முயலும் முரளி விஜய்யும் அஸ்வினும் கோவாவுக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பாகப் பங்களித்துள்ளார்கள். எனினும் தமிழக அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 48.5 ஓவர்களில் அந்த அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முரளி விஜய் 51, பாபா அபரஜித் 52 ரன்கள் எடுத்தார்கள். கெளசிக் காந்தி 43 ரன்கள் எடுத்தார். எனினும் தமிழக அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அதிக ஸ்கோர் எடுக்கமுடியாமல் போனது. கோவாவின் தர்சன் மிசால், ஸ்ரீனிவாஸ் ஃபத்தே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இந்த எளிதான இலக்கை 46.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு அடைந்தது கோவா அணி. தொடக்க வீரர் ஸ்வப்னில் 103 ரன்கள் எடுத்தார். இந்திய ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அஸ்வின் 10 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நேற்று, விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 'சி' பிரிவில் தமிழகம் தனது முதல் ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது.