டெஸ்ட் வரலாற்றில் இதுவரை அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார சங்ககாரா 5-ஆவது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டுடன் முதல்தர போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற சங்ககாரா, ஆங்காங்கே நடைபெறும் டி20 தொடர்களில் பங்கேற்று வருகிறார்.
டி20 போட்டிகளால் உலகெங்கும் கிரிக்கெட் பிரபலமடைந்துள்ளது, இருப்பினும் அடுத்த தலைமுறைக்கு டெஸ்ட் போட்டியின் மீதான ஆர்வம் குறைந்து வருவதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் குமார சங்ககாரா கூறியதாவது:
அமெரிக்கா மற்றும் சீனாவில் கிரிக்கெட் விளையாட்டைப் பிரபலப்படுத்த டி20 வகை போட்டிகள் மிகச் சிறப்பானதாக இருக்கும். அதன் வரவு உலக கிரிக்கெட்டை வலுப்பெறச் செய்துள்ளது. இருப்பினும் இதனால் சில பாதிப்புகளும் ஏற்படத்தான் செய்கிறது.
தற்போதைய இளைஞர்கள் அநைவரும் டி20 கிரிக்கெட்டை மட்டுமே பெரிதும் விரும்புகின்றனர். ஏனென்றால் அதற்கு ஊதியமும் ஒரு முக்கிய காரணம். டெஸ்ட் போட்டிகளை விட டி20 போட்டிகளில் விளையாட அதிக தொகை வழங்கப்படுகிறது. ஒருசில குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளுக்கு என்று பிரத்தியேக ஊதிய விகிதத்தை வழங்குகிறது. இதனை அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் பின்பற்ற வேண்டும்.
டெஸ்ட் போட்டிகளின் நிலை குறித்து வீரர்கள் மற்றும் ரசிகர்களின் மனநிலை என்ன என்பதை முதலில் அறியவேண்டும். மாற்றங்களை ஏற்றுக்கொண்டால்தான் ஒரு விளையாட்டு உச்ச நிலைக்கு மேலோங்க முடியும். எந்த ஒரு வீரருக்கும் சர்வதேச அளவில் தங்கள் அணிக்காக விளையாடுவதே பெருமையாக இருக்கும். என் வயதுடையவர்களுக்கு மட்டுமே டி20 எளிமையான ஆட்டம் என்றார்.
கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய வாரியங்களாக இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா திகழ்கிறது. இந்த மூன்று நாடுகளின் வீரர்களும் அதிக வருவாய் ஈட்டுபவராக உள்ளனர். குறிப்பாக கடந்த நிதியாண்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 1,469,000 டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளார். மாறாக ஜிம்பாப்வே அணியின் கேப்டனுக்கு 86,000 டாலர்கள் மட்டுமே வருமானம் பெற முடிந்தது.