பெப்சி நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா நூயி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கிரிக்கெட் அமைப்பின் முதல் தன்னாட்சி பெண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 2018 முதல் இப்பொறுப்பை அவர் வகிப்பார் என ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசி-யில் தன்னாட்சி இயக்குநர் பொறுப்பு உருவாக்கப்படவேண்டும், அப்பொறுப்பை வகிப்பவர் பெண்ணாக இருக்கவேண்டும் என்று ஜூன் 2017 ஐசிசி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து நூயி இப்பதவிக்குத் தேர்வாகியுள்ளார்.
ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் இதுகுறித்து கூறியதாவது: ஐசிசியின் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் இந்திரா நூயின் பங்களிப்பும் இனி இருக்கும். கிரிக்கெட் தொடர்பான பதவியை அவர் வகிப்பது இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவும். வர்த்தகத்தில் முக்கியப் புள்ளியாக அவர் உள்ளார். இந்தப் பதவிக்கு அவர் மிகவும் பொருத்தமானவர் என்று கூறியுள்ளார்.
புதிய பதவி குறித்து இந்திரா நூயி கூறியுள்ளதாவது: எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். இளம்வயதில் கல்லூரி வரைக்கும் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். ஆரோக்கியமான போட்டி, நேர்மை, குழு ஒற்றுமை போன்றவற்றை கிரிக்கெட்டிலிருந்து நான் கற்றுக்கொண்டுள்ளேன். இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் நபர் என்பது பரவசத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
ஐசிசியில் இந்திரா நூயின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள். மேலும் இரண்டு முறை அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம். அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் ஒருவர் இப்பதவியை வகிக்க ஐசிசி விதிமுறைகளில் இடமுண்டு.