விஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக அணியிலிருந்து தொடக்க வீரர் முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளார்.
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தியது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழகத்துக்கு இது 2-ஆவது தொடர் தோல்வியாகும். சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய தமிழகம் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை 48.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வென்றது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பங்கேற்கத் தவறிய முரளி விஜய் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தோள்பட்டை வலி காரணமாக முரளி விஜய் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டாலும் இதுகுறித்து முறையாக அணிக்குத் தெரிவிக்கவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அணியின் தேர்வுக்குழு, மருத்துவக்குழு ஆகிய இரு தரப்பினருக்கும் விஜய்க்கு நேர்ந்த காயம் குறித்து தகவல் சொல்லப்படவில்லை.
நேற்று காலை ஆட்டம் தொடங்கும் முன்பு, காலை 7.30 மணிக்குப் பயிற்சியாளர் கனிட்கருக்கு விஜய் முதலில் தகவல் சொல்லியுள்ளார். இதையடுத்து கங்கா ஸ்ரீதர் தொடக்க வீரராகக் களமிறங்கினார்.