இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 4-ஆவது ஒருநாள் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்ட இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவன் சதமடித்தார்.
290 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 28 ஓவர்களில் 202 ரன்களாக வெற்றி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் பிங்க் ஓடிஐ-யில் தோற்காத அணி என்கிற சிறப்பையும் தக்க வைத்தது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டது. இந்த போட்டியின் போது தாமதமாக பந்துவீசிய காரணத்தால் களநடுவர்கள் அளித்த புகாரின் பேரில் ஆட்ட நடுவர் இந்நடவடிக்கையை மேற்கொண்டார்.
இதனால் ஐசிசி 2.5.1 விதிமுறையின் படி தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்கராமுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதமும், இதர வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.