இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவனை ஆட்டமிழக்கச் செய்ததை அடுத்து, அவரைப் பார்த்து தீவிரமாக சைகை செய்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் அந்நாட்டுக்கு அணிக்கு எதிராக 5-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா விளையாடியது. இந்த ஆட்டத்தில் 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.
முன்னதாக, ஷிகர் தவன் 7.2-ஆவது ஓவரில் ரபாடா பந்துவீச்சில் பெலுக்வாயோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நடுவர் தீர்ப்பை மதித்து தவன் பெவிலியன் நோக்கிச் சென்றபோது ரபாடா சைகை செய்தார்.
இதையடுத்து, நடுவரிடம் தவன் புகார் அளித்தார். ஆட்டத்தில் நடுவர்களாக செயல்பட்ட இயான் குட், ஷான் ஜார்ஜ், 3-ஆவது நடுவர் அலீம் தர், 4-ஆவது நடுவர் பொங்கானி ஜிலே ஆகியோர் ஐசிசியிடம் புகார் அளித்தார்.
தனது தவறை ரபாடா ஒப்புக் கொண்டார். இதையடுத்து, விசாரணை எதுவுமின்றி அவரது ஒரு நாள் ஆட்ட ஊதியத்தில் 15 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று ஐசிசி உத்தரவிட்டது. அத்துடன், அபராத புள்ளி ஒன்றும் விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் ரபாடாவின் செயல்பாட்டுக்கு எதிராக ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது முதல் இதுவரை 5 அபராதப் புள்ளிகளை அவர் பெற்றுள்ளார். அடுத்த 24 மாதங்களுக்குள் அவர் 8 அல்லது அதற்கு அதிகமான அபராதப் புள்ளிகளை பெற்றால் அவர் அந்த சமயத்தில் விளையாட உள்ள கிரிக்கெட் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவார் என்று ஐசிசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.