கிரிக்கெட் உலகில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஏபி டி வில்லியர்ஸ் சனிக்கிழமை தனது 34-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையடுத்து அவருக்கு பல கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரரான டி வில்லியர்ஸ், உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். குறிப்பாக பேட்டிங்கில் 360 டிகிரி என்னும் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியவர். அதிலும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவிப்பதில் வல்லவர்.
மைதானத்தின் அனைத்து நிலைகளிலும் தன்னால் ரன்குவிக்க இயலும் என்பதை நிரூபித்தவர். எல்லாப் பக்கமும் ரன் எடுக்கும் திறமை உள்ளதாலேயே கிரிக்கெட் உலகு இவரை மிஸ்டர் 360 என்று செல்லப் பெயர் வைத்து அழைக்கிறது.
இதுவரை 25 ஒருநாள் சதங்களைக் குவித்துள்ளார். இவை அனைத்தும் ஸ்டிரைக் ரேட் 100-க்கும் மேல் பதிவானவையாகும். தனது அதிரடி பேட்டிங் காரணமாக கடைசி கட்டங்களில் வேகமாக ரன்களை சேர்பதில் கில்லாடி. நடுவரிசையில் ஆட்டத்தை கட்டமைப்பதிலும் வல்லவர்.
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 16 பந்துகளில் அரைசதம், 31 பந்துகளில் சதம், 63 பந்துகளில் 150 ரன்கள் என்று விளாசி சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டி வில்லியர்ஸின் 34-ஆவது பிறந்தநாளையொட்டி கிரி்க்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்த விநோத வாழ்த்து தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அதில், டி வில்லியர்ஸின் 360 டிகிரி பேட்டிங் ஸ்டைலை குறிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் புகழ்பெற்ற 360 டிகிர வகை புகைப்படத்துடன் தனது வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார்.