இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி வென்றது.
இதையடுத்து நடைபெற்ற 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 5-1 என்ற கணக்கில் இந்தியா மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.
தற்போது, இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஜோஹன்னஸ்பர்கில் நடைபெற்ற முதல் டி20-யில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், 5-ஆவது ஒருநாள் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸுக்கு காயம் ஏற்பட்டது. இது தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளதால், அடுத்து நடைபெறும் 2 டி20 போட்டியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் மாற்று வீரர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
டி வில்லியர்ஸுக்கு ஏற்பட்டுள்ள காயம் தீவிரமடைந்துள்ளதால் அவருக்கு போதிய சிகிச்சையும், ஓய்வும் தேவை எனவே அடுத்த 2 போட்டிகளிலும் பங்கேற்கமாட்டார் என்று தென் ஆப்பிரிக்க அணி நிர்வாக இயக்குநர் டாக்டர் முகமது மோஸேஜ் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.