தேசிய நடைப் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் தில்லி வீராங்கனை செளம்யா பேபி தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.
பந்தய இலக்கான 20 கி.மீட்டரை செளம்யா பேபி ஒரு மணி 31 நிமிடம் 28.72 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். முன்னதாக, குஷ்பிர் ஒரு மணி 31 நிமிடம் 40 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த ஆண்டு போட்டியில் இந்திய தடகள சம்மேளனம் சார்பில் பங்கேற்ற குஷ்பிர், ஒரு மணி 32 நிமிடம் 16.96 விநாடிகளில் வந்து வெள்ளியும், ஹரியாணா வீராங்கனை கரம்ஜித் கெளர் 1 மணி 34 நிமிடம் 8.60 விநாடிகளில் வந்து வெண்கலமும் வென்றனர்.
ஆடவருக்கான 20 கி.மீட்டர் பிரிவில் தேசிய சாதனையாளரான கேரளத்தின் இர்ஃபான் 1 மணி 21 நிமிடம் 31.25 விநாடிகளில் முதலிடம் பிடித்து தங்கத்தை தக்கவைத்துக் கொண்டார். உத்தரகண்டின் மணீஷ் சிங் 2-ஆம் இடமும், ஹரியாணாவின் நீரஜ் 3-ஆம் இடமும் பிடித்தனர்.