பல்கேரியாவில் நடைபெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் 48 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலமாக அவர் சர்வதேச களத்தில் தொடர்ச்சியாக 3-ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
முன்னதாக மேரி கோம் தனது காலிறுதியில் ருமேனியாவின் ஸ்டெலுடா தத்தாவை வீழ்த்தினார்.
இதனிடையே, ஆடவருக்கான 64 கிலோ பிரிவில் போட்டியிட்ட இந்தியரான தீரஜ் ரங்கி தனது முதல் சுற்றில், மோரிஷஸின் லூயிஸ் காலின் ரிகார்னோவிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். இப்போட்டியில் இதுவரை, சீமா பூனியா (81 கிலோவுக்கு மேல்), சவீதி பூரா (75 கிலோ), மீனா குமாரி தேவி (54 கிலோ), பாக்யவதி கச்சாரி (81 கிலோ) ஆகியோர் தங்களது பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
இதில் சவீதி பூரா மற்றும் மீனா குமாரி தேவி ஆகியோர் காலிறுதியில் போட்டியிட்டு வென்ற நிலையில், சீமா பூனியா மற்றும் பாக்யவதி ஆகியோர் 'பை' வாய்ப்பு மூலமாக அரையிறுதிக்கு தகுதிபெற்றனர்.