ஊக்கமருந்து வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திய தடகள வீரர் ஜிதின் பால், தம் மீது போலியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக தாம் மேல் முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட மெல்டோனியம் ஊக்கமருந்தை ஜிதின் வைத்திருந்ததாக, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் (நாடா), ஊக்கமருந்து தடுப்பு ஒழுங்கு நடவடிக்கைக் குழு அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி பாட்டியலாவில் உள்ள தேசிய விளையாட்டு அமைப்பின் விடுதியில் தடகள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் அறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஜிதின் அறையில் இருந்து மெல்டோனியம் ஊக்கமருந்து கைப்பற்றப்பட்டதாக நாடா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜிதின் இதுகுறித்து கூறியதாவது:
நாடா இந்த வழக்கை ஜோடித்துள்ளது. எனது அறையில் இருந்து கார்னிடைன் ஊசி மருந்து மட்டுமே கண்டெடுக்கப்பட்டது. அதை நானும் ஒப்புக் கொண்டேன்.
எனக்கு தடை உத்தரவு விதிக்கப்பட்ட மே 22-ஆம் தேதி அன்றே மெல்டோனியம் குறித்த தகவல் எனக்கு தெரியவந்தது. சம்பவத்தின்போது ஒரு காகித உறையின் மேல் கையெழுத்து வாங்கினர். அப்போது அதில் கார்னிடைன் ஊசி மருந்து எனது அறையில் கண்டெடுக்கப்பட்டதாகவே தகவல் இருந்தது. பின்னர் அதில் மாற்றம் செய்து மெல்டோனியம் குறித்த தகவலை நாடா சேர்த்துள்ளது என்று ஜிதின் கூறினார்.