பாட்மிண்டன் உலகின் முதல்நிலை வீரரும், டென்மார்க்கைச் சேர்ந்தவருமான விக்டர் அக்ஸெல்சென், மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
கணுக்கால் காயத்துக்காக அறுவைச்சிகிச்சை செய்துகொண்ட அவர், இன்னும் அதிலிருந்து மீண்டுவர வேண்டியுள்ளதால் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு கவனமாக ஆடவும், உடல்நலத்தை பேணவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இச்சூழலில் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டனில் விளையாடுவது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதில் பங்கேற்கவில்லை. அந்த வாய்ப்பை தவறவிடுவது ஏமாற்றமளிக்கிறது' என்றார்.
கடந்த சீசனில் உலக சாம்பியன் ஆன விக்டர், துபை சீரிஸ் ஃபைனல், ஜப்பான் ஓபன், இந்திய ஓபன் பட்டங்களையும் வென்றிருந்தார்.
இந்த சீசனில் மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் காயமடைந்து விலகிய அவர், அறுவைச்சிகிச்சை காரணமாக இந்திய ஓபன், ஐரோப்பிய அணிகள் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது.