உலகக் கோப்பை கூடைப்பந்து: இந்தியா தோல்வி
உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்தியா 88-102 என்ற புள்ளிகள் கணக்கில் ஜோர்டானிடம் தோல்வி கண்டது.
ஆசிய அணிகளுக்கான இந்த தகுதிச்சுற்று ஆட்டம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஸ்ரீ கன்டீரவா விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இத்துடன் 3 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்தியா, அனைத்திலும் தோல்வியடைந்துள்ள நிலையில், "சி' பிரிவின் கடைசி இடத்தில் உள்ளது. இந்தியா, திங்கள்கிழமை நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் லெபனானை எதிர்கொள்கிறது.
முன்னதாக, ஜோர்டானுக்கு எதிரான ஆட்டத்தில் சத்னம் சிங் தலைமையிலான இந்திய அணி அருமையாக ஆடத் தொடங்கியது. ஆனால், முதல் கால்மணி நேர முடிவில் முன்னிலை பெற்ற ஜோர்டான், இறுதி வரையில் அதை தக்கவைத்துக் கொண்டது.
இந்திய தரப்பில் அரவிந்த் அண்ணாதுரை அதிகபட்சமாக 28 புள்ளிகளை கைப்பற்றினார். சத்னம் சிங் 20 புள்ளிகள் வென்றார். ஜோர்டான் தரப்பில் ஹுசைன் 19, டக்கர் 18 புள்ளிகள் வென்றனர்.