ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி மகளிருக்கான ஃப்ளோர் பிரிவு இறுதிச்சுற்றில் 10.83 புள்ளிகளுடன் 7-ஆவதாக வந்தார்.
முன்னதாக மகளிருக்கான வால்ட் பிரிவில் அருணா, வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்திருந்தார். உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும். மேலும் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பையில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை இதன்மூலம் படைத்துள்ளார்.
இதுகுறித்து அருணா புத்தா ரெட்டி கூறியதாவது:
இந்தியாவை பெருமைப்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தீபா கர்மாகர் தான் எனக்கு முன்மாதிரி. அவர், சர்வதேச அரங்கில் பல பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
நானும் அதுபோலவே இந்தியாவுக்காக பல பதக்கங்களை வென்று சாதனைப் படைக்க விரும்புகிறேன். இதன்மூலம் எனக்கான அடையாளத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.