தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
எதிர்வரும் ஐபிஎல் போட்டியில், ஓர் அணி, தன்னிடம் இருக்கும் வீரர்களில் 5 பேரை ஏலமின்றி தக்கவைத்துக் கொள்வதற்கு ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் முடிவு செய்தது. ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பாக நேரடியாக 3 வீரர்களையும், ஏலத்தின் போது 2 வீரர்களையும் (ரைட் டூ மேட்ச் முறையில்) தக்கவைக்கலாம். இது, தடைக்காலம் முடிந்து 2018-ஆம் ஆண்டு சீசனில் போட்டிக்குத் திரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த 2015-ம் ஆண்டில் தங்கள் வசம் இருந்த வீரர்களை ஏலமின்றி தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
முன்னதாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அணிகளைச் சேர்ந்த வீரர்கள், புதிதாக போட்டியில் சேர்க்கப்பட்ட ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒவ்வொரு அணியும் யார் யாரைத் தக்கவைத்து கொண்டுள்ளார்கள் என்பது இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகிய மூவரையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதனால் இந்த 3 வீரர்களும் சென்னை அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள்.
ஐபிஎல்: அணிகள் தக்கவைத்துக்கொண்ட வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ்
தோனி (சம்பளம் - ரூ. 15 கோடி), சுரேஷ் ரெய்னா (ரூ. 11 கோடி), ஜடேஜா (ரூ. 7 கோடி
மும்பை இந்தியன்ஸ்
ரோஹித் சர்மா (ரூ. 15 கோடி), ஹார்திக் பாண்டியா (ரூ. 11 கோடி), பூம்ரா (ரூ. 7 கோடி)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
விராட் கோலி (ரூ. 17 கோடி), டி வில்லியர்ஸ் (ரூ. 11 கோடி), சர்பராஸ் கான் (ரூ. 1.75 கோடி)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சுனில் நரைன் (ரூ. 8.5 கோடி), ஆண்ட்ரே ரஸல் (ரூ. 7 கோடி)
தில்லி டேர்டெவில்ஸ்
ரிஷப் பந்த் (ரூ. 8 கோடி), கிறிஸ் மாரிஸ் (ரூ. 7.1 கோடி), ஷ்ரேயாஸ் ஐயர் (ரூ. 7 கோடி)
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
அக்ஷர் படேல் (ரூ. 6.75 கோடி)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
டேவிட் வார்னர் (ரூ. 12 கோடி), புவனேஸ்வர் குமார் (ரூ. 8.5 கோடி)
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஸ்டீவ் ஸ்மித் (ரூ. 12 கோடி)