'பதக்க வாய்ப்புள்ள வீரர்கள்' (டிஓபி) திட்டத்தின் கீழ் 175 விளையாட்டு வீரர்/வீராங்கனைகளுக்கான இதர செலவுகளுக்காக கடந்த ஆண்டில் ரூ.3.14 கோடி விடுவிக்கப்பட்டதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறினார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதிலில், தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியில் (என்எஸ்டிஎஃப்) இருந்து 2017 செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான கடைசி காலாண்டில் அந்தத் தொகை விடுவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்தத் தொகை மாதம் ரூ.50,000 என்ற வீதத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 2015-ஆம் ஆண்டில் 110 விளையாட்டு வீரர்களும், 2016-இல் 67 வீரர்களும் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததாக தெரிவித்தார்.