தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
கேப் டௌனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சு பெரும்பங்கு வகித்தது. இரு அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு எதிரணி விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தினர்.
இருப்பினும் இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்த தென் ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நடப்பு தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரையில் இதிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்குகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் வலைப்பயிற்சியின் போது முன்னணி சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், ஸீம் பௌலிங் எனப்படும் வேகப்பந்து வீசி பயிற்சி செய்தார். இந்த விடியோ பதிவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஆஃப் ஸ்பின் மட்டுமல்லாது கேரம் பால் எனப்படும் பந்துவீச்சு வகையில் தேர்ச்சி பெற்றுள்ள அஸ்வின், சமீபகாலமாக லெக் ஸ்பின் பந்துவீச்சையும் பயிற்சி செய்து வருகிறார். இதனிடையே தற்போது ஸீம் பௌலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.