நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள 4 நாடுகள் மட்டும் பங்கேற்கும் ஹாக்கி போட்டியில் இந்தியா-ஜப்பான் ஆடவர் ஹாக்கி அணிகள் புதன்கிழமை மோதவுள்ளன.
இரண்டு 5 நாள் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
நியூஸிலாந்து, இந்தியா, பெல்ஜியம், ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் தொடக்க நாளில் ஜப்பான் அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
வியாழக்கிழமை பெல்ஜியம் அணியையும், சனிக்கிழமை நியூஸிலாந்தையும் எதிர்கொள்கிறது இந்தியா.
மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டில் எதிர்கொள்ள உள்ள முதல் போட்டி இதுவாகும்.
நியூஸிலாந்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் ரூபிந்தர் பால் சிங் கூறியதாவது:
நியூஸிலாந்தில் பயிற்சி மேற்கொண்டோம். நல்ல தொடக்கத்தை ஏற்படுத்துவோம் என்று நம்புகிறேன். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பான் அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருக்கிறோம்.
அதுபோல், இந்த ஆட்டத்திலும் வெற்றி பெறுவோம் என்றார் அவர்.