19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி மூன்றாவது வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்திய அணியின் பிரமாதமான பந்துவீச்சால் 48.1 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஜிம்பாப்வே அணி. இடக்கை சுழற்பந்துவீச்சாளர் அனுகுல் ராய், இன்றும் பிரமாதமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜிம்பாப்வே அணியின் ஸும்பா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார்.
எளிதான இந்த இலக்கை விக்கெட் இழப்பின்றி 21.4 ஓவர்களில் அடைந்தது இந்திய அணி. ஷுப்மன் கில் 90, விக்கெட் கீப்பர் தேசாய் 56 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணி 155 ரன்கள் எடுக்க உதவினர்.
காலிறுதி வாய்ப்பை ஏற்கெனவே உறுதி செய்துவிட்ட இந்திய அணி, ஜிம்பாப்வே மீதும் ஆதிக்கம் செலுத்தி தனது தோல்வியில்லா வெற்றி நடையை தொடந்துள்ளது.