மும்பையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் எத்தியோபியாவைச் சேர்ந்த சாலமன் டெக்சிசா ஆடவர் பிரிவிலும், சகநாட்டவரான அமானே கொபேனா மகளிர் பிரிவிலும் சாம்பியன் ஆகினர்.
ஆடவர் பிரிவில் சாலமன் டெக்சிசா பந்தய இலக்கான 42 கிலோ மீட்டரை 2 மணி 9 நிமிடம் 34 நொடிகளில் எட்டி முதலிடம் பிடித்தார். சகநாட்டவரான ஷுமெட் அகல்னா 2 மணி 10 நிமிடங்களில் வந்து 2-ஆம் இடமும், கென்யாவைச் சேர்ந்த ஜோஷுவா கிப்கோரிர் 2 மணி 10 நிமிடம் 30 நொடிகளில் வந்து 3-ஆம் இடமும் பிடித்தனர்.
மகளிர் பிரிவில் அமானே கொபேனா 2 மணி 25 நிமிடம் 49 நொடிகளில் முதல் வீராங்கனையாக வந்தார். நடப்புச் சாம்பியனான கென்யாவின் போர்னஸ் கிடுர் 2 மணி 28 நிமிடம் 48 நொடிகளில் வந்து 2-ஆம் இடமும், எத்தியோபியாவின் ஷுமோ ஜினிமோ 2 மணி 29 நிமிடம் 41 நொடிகளில் வந்து 3-ஆம் இடமும் பிடித்தனர்.
இரு பிரிவுகளிலும் வெற்றியாளர்களுக்கு தலா ரூ.26 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டியின் ஆடவர் பிரிவில் பங்கேற்ற இந்தியர்களான கோபி தொனகல், நிதேந்திர சிங் ராவ் ஆகியோர் முறையே 11, 12-ஆவது இடங்களைப் பிடித்தனர்.
இதனிடையே, ஆடவர் அரை மாரத்தான் போட்டியில் இந்தியரான பிரதீப் சிங் ஒரு மணி 5 நிமிடம் 42 நொடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார். சங்கர் மான் தபா, தீபக் கும்பார் முறையே 2 மற்றும் 3-ஆம் இடம் பிடித்தனர். மகளிர் அரை மாரத்தானில் சஞ்சீவனி ஜாவத் 1 மணி 26 நிமிடம் 24 நொடிகளில் வந்து வெற்றி பெற்றார். மோனிகா அதாரே, ஜுமா காடுன் முறையே 2 மற்றும் 3-ஆவதாக வந்தனர்.
புகார்: இதனிடையே, போட்டி நோக்கம் இல்லாமல் சாதாரணமாக மாரத்தானில் பங்கேற்றவர்களும், மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளும் இடையூறுகள் ஏற்படுத்தியதாக மாரத்தான் வீராங்கனைகள் பலர் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் மீது அதிருப்தி தெரிவித்தனர்.