இன்று முதல் இந்தோனேஷிய பாட்மிண்டன் வெற்றி முனைப்பில் சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த்

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் உலக டூர் பாட்மிண்டன் போட்டி ஜகார்த்தா நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், ஹெ.எஸ்.பிரணாய் ஆகியோர்

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் உலக டூர் பாட்மிண்டன் போட்டி ஜகார்த்தா நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், ஹெ.எஸ்.பிரணாய் ஆகியோர் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
கடந்த ஆண்டு காலண்டரில் மூன்று பட்டங்களை வென்றதுடன், 3 போட்டிகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய சிந்து, சமீபத்தில் நிறைவடைந்த பிரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியிலும் நல்ல ஃபார்மில் இருந்தார். இப்போட்டியில் அவர் தனது முதல் சுற்றில் இந்தோனேஷியாவின் ஹன்னா ரமாதினியை எதிர்கொள்கிறார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நெவால், கணுக்கால் காயத்திலிருந்து மீண்டுள்ள நிலையில் இப்போட்டியில் பங்கேற்கிறார். தனது முதல் சுற்றில் அவர், பலம் வாய்ந்த வீராங்கனையாக உலகின் 8-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் சென் யுஃபெயுடன் மோதுகிறார்.
ஆடவர் பிரிவில், 2017 சீசனில் சிறப்பாக செயல்பட்டதன் பலனாக சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள்ளாக வந்துள்ள பிரணாய், முதல் சுற்றில் டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கேவை சந்திக்கிறார். மற்றொரு இந்தியரான சமீர் வர்மாவும்-ஜப்பானின் கஸுமசா சகாயும் மற்றொரு முதல் சுற்றில் மோதுகின்றனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்-சிரக் ஷெட்டி ஜோடி, போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் ஜப்பானின் டகுடோ இன்க்-யூகி கனெகோ இணையை எதிர்கொள்கிறது. மானு அத்ரி-சுமீத் ரெட்டி இணை, சீன தைபேவின் லு சிங் யாவ்-யாங் போ ஹான் ஜோடியை சந்திக்கிறது.
இதனிடையே, முதல்நாளில் நடைபெறவுள்ள தகுதிச்சுற்று போட்டிகளில் காஷ்யப், செளரவ் வர்மா, ஷுபாங்கர் டே, அபிஷேக் எலேகர் ஆகிய 4 இந்தியர்கள் களம் காண்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com