செய்யது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியின் சூப்பர் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வென்றது.
கொல்கத்தாவில் திங்கள்கிழமை நடைபெற்ற 'ஏ' பிரிவு ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் அதிகபட்சமாக 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் வீரர் மார்கண்டே 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய பஞ்சாப் 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வென்றது. அதிகபட்சமாக குர்கீரத் சிங் 43 ரன்கள் எடுத்தார். மும்பை வீரர் சிவம் துபே 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
தில்லி வெற்றி: இதனிடையே 'பி' பிரிவில் பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த பரோடா 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தில்லி 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து வென்றது.
இதர ஆட்டங்களில் ராஜஸ்தான் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜார்க்கண்டையும், உத்தரப் பிரதேசம் 75 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு வங்கத்தையும் வீழ்த்தின.