தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை நோஸோமி ஓக்குஹாராவிடம் தோல்வியடைந்தார்.
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை நோஸோமி ஓக்குஹாராவை எதிர்கொண்டார். இந்த போட்டியின் முதல் செட்டில் நோஸோமி தொடக்கம் முதலே முன்னிலை கண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தார். 20 நிமிடங்கள் நடைபெற்ற முதல் செட்டை நோஸோமி 21-15 என கைப்பற்றினார்.
இதனால், 2-ஆவது செட்டில் சிந்து நெருக்கடியுடன் களமிறங்கினார். இருப்பினும் அவர் 2-ஆவது செட்டில் தொடக்கத்தில் 5-1 என்ற கணக்கில் நல்ல முன்னிலையில் பயணித்து வந்தார். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பின்னர் நோஸோமி சிந்துவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் தொடர் புள்ளிகளாக குவித்து வந்தார். இதனால், இடைவெளியின் போது சிந்து 11-9 என 2 புள்ளிகள் மட்டுமே முன்னிலை வகித்து வந்தார்.
அதன்பிறகு, நோஸோமி ஆட்டத்தில் முன்நோக்கி பயணிக்கத் தொடங்கினார். இதனால், சிந்து 11-12, 12-14, 14-16, 16-17, 17-18, 18-19 என பின்தங்கிய நிலையிலேயே விளையாடி வந்தார். இதையடுத்து, 2-ஆவது செட்டின் கடைசி வரை சிந்துவால் முன்னிலை பெற முடியவில்லை. இதனால், சிந்து 18-21 என 2-ஆவது செட்டையும் இழந்தார்.
இதன்மூலம், ஜப்பான் வீராங்கனை நோஸோமி 21-15, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.